
”தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை” என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை ஏப் 20 2025
விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் தொண்டர்களிடம் உரையாற்றினார். அதில், திமுகவை நம்பி மட்டுமே விசிக உள்ளது போல் சில அற்பர்கள் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட, இயக்கத் தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.
“பேரம் பேசுவது ராஜதந்திரம் அல்ல”

எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது. ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது. கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் கூட்டணி உறவை வைத்துக் கொள்வது என்பன உள்ளிட்டவை பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடுகாட்டவில்லை. எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர துணிச்சல், தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும்.

இது புரியாத புள்ளர்கள், அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது என திருமாவளவன் கூறி உள்ளார்.




