
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் தோல்விகளால் விரக்தியில் உள்ளார். இதன் வெளிப்பாடுதான் தேர்தல் ஆணையம் மீதான அவரின் விமர்சனம் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை, ஏப்.21 2025

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையம் சமரசம் செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சர்வதேச தளங்களில் இந்தியாவின் ஜனநாயக பிம்பத்தை கெடுத்துவிட்டதாக திங்கள்கிழமை (ஏப்.21 2025) குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “ராகுல் காந்தி வெளிநாடு சென்று இந்த நாட்டின் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்து பொய்களைப் பரப்பி வருகிறார். மேலும், அதன் மீது அவதூறு பரப்ப முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஜனநாயகம் குறித்து அவர் கேள்விகளை எழுப்ப முயற்சிக்கிறார். தேர்தல்களில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விளைவுகளால் அவர் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

மேலும், “ராகுல் காந்தி நடந்து கொள்ளும் விதம் அவரது குணாதிசயத்தில் ஒரு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இதுபோன்ற செயல்களைச் செய்வதற்குப் பதிலாக, அவர் மக்கள் மத்தியில் சென்று மக்களின் நம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்து, அவர் மீண்டும் பெற்றால், அவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். யாரையும் அவதூறு பரப்பி தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்றார்.




