
பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.
புதுடெல்லி மே 21 2025:

புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக யூடியூபர் ஜோதி மல்கோத்ரா ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தத் தகவல்கள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து, ஹிசார் காவல்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் குமார் கூறுகையில், “நவம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை பாகிஸ்தானியரும், தூதரக ஊழியருமான எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையின் போது மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டார். மல்ஹோத்ராவை ஒரு உளவுத்துறை சொத்தாக வளர்க்க டேனிஷ் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்” என்றார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுடன் (PIOs) ஜோதி மல்ஹோத்ராவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் புலனாய்வுப் பிரிவு (IB) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஜோதி மல்ஹோத்ராவிடம் விரிவாக விசாரணை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்புகள் உள்ளிட்டவை தற்போது ஒரு பரந்த விசாரணையின் மையமாக உள்ளன.
இந்த நிலையில், புலனாய்வாளர்கள் ஜோதி மல்கோத்ராவின் சர்வதேச பயண வரலாற்றையும் ஆராய்ந்து வருகின்றனர். அவர் 2018 ஆம் ஆண்டு தனது பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளார்.

அந்தப் பாஸ்போர்ட் 2028 வரை செல்லுபடியாகும் வரையில் உள்ளது. இவர், பாகிஸ்தான், சீனா, துபாய், தாய்லாந்து, வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (மே 21 2025) ஜோதி மல்கோத்ரா அங்குள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.



