தொகுதி மறுவரையறைக்கு எதிரான, கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று சென்னையில் துவங்கியது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
சென்னையில் நடைபெறும் கூட்டு குழு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்கும் வெளி மாநில தலைவர்களுக்கு அந்தந்த மாநில மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அந்தந்த மாநில தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவ்வாறு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி கட்டிடம் நேற்று நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வண்ண விளக்குகளால் மிளிரவிடப்பட்டன.
தொகுதிகளை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம். இது தொடக்கம் தான். வெற்றியை நோக்கி எங்கள் நடவடிக்கை இருக்கும். கல்வி உள்ளிட்ட துறைகளில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என்று கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறினார்.




